பல்லடம்: பல்லடத்தில் இன்று வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டிக் கொலை ெசய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை சேர்ந்த 8வது வார்டு பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். இவரது மனைவி தனலட்சுமி(42). பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தார். இவர்களது மகள் பூவரசி (22). தனியார் பைக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிக்குமார் மகன் அக்சயன்(27) என்பவர் கோவை தனியார் கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ 2ம் ஆண்டு பயின்று வந்தார். இவரும் பூவரசியும் கடந்த 3 ஆண்டாக இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி அக்சயன் பூவரசியின் பெற்றோரை வலியுறுத்தி வந்தார். ஆனால் இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும் இதற்கு பூவரசியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் பல்லடம் வந்த அக்சயன் லாட்ஜில் அறை எடுத்து தங்கி தினமும் தனலட்சுமி வீட்டிற்கு வந்து பூவரசியை திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தி வந்தார்.
இன்று காலையும் இதே போல் வந்து பூவரசியின் வீட்டிற்குள் புகுந்த அக்சயன் பூவரசியை கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என தகராறு செய்தார். ஆனால் மீண்டும் தனலட்சுமி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கடும் ஆத்திரமடைந்த அக்சயன் வீட்டிற்கு வெளியே விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்த பூவரசி அதை தடுக்க வந்தார். அவரையும் அக்சயன் சரமாரியாக வெட்டிச் சாய்த்தார். இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.
முன்னதாக இவர்களது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அக்சயனை கையும் களவுமாக பிடித்து கயிறால் கட்டி பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூவரசியின் தந்தை செக்யூரிட்டி பணிக்கு சென்றதால் அவர் உயிர் தப்பினார். போலீசார் சம்பவயிடம் வந்து அக்சயனை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீடு புகுந்து வாலிபர் தாய் மற்றும் மகளை கொலை செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






