ஸ்காட் சர்வதேச பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசை

ஸ்காட் சர்வதேச பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசை

ஸ்காட் சர்வதேச பள்ளியில் தமிழர் திருநாளாகவும், உழவர்களின் பெருநாளாகவும் போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 13.01.2026 செவ்வாய்க்கிழமை சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் தமிழர் மரபுக்கு உரிய பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளி வளாகம் முழுவதும் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய களையுடன் விழா நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பொங்கலிடும் போட்டி, முறுக்கு சாப்பிடும் போட்டி மற்றும் உறியடித்தல் (பானை உடைக்கும்) போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை மகிழ்ச்சியாக மாற்றினர்.
சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் திரு. கச்சி முகைதீன் என்கிற “கோல்டன் கச்சி” அவர்கள் கலந்து கொண்டு, பொங்கல் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், தமிழர் பண்பாடு, உழவர்களின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பொங்கல் சமைக்கும் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்காட் சர்வதேச பள்ளியின் முதல்வர் திருமதி கல்பனா அவர்களின் தலைமையில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழர் மரபு மற்றும் பண்பாட்டை நினைவூட்டும் வகையில் சிறப்பாக நிறைவு பெற்றது.