புதுடெல்லி முதல்வரின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு!

இந்தியா – புதுடெல்லி முதல்வர் ரேகா குப்தா, நேற்று புதன்கிழமை (20) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது, மனு கொடுக்கவந்த நபர் ஒருவர், முதல்வரின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது, பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.

அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து, புகார்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், புதுடெல்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை (20) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார்.

அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர், முதல்வரின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் தாக்கியுள்ளார்.

முதல்வரை தாக்கிய அந்த நபரை, பொலிஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

கூட்டத்தில் முதல்வரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என புதுடெல்லி பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா, டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உள்ளிட்டேர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.