காட்டுமன்னார்கோவில் அருகே இறந்தவர் உடலை வாய்க்காலில் ஆபத்தான முறையில் தூக்கி செல்லும் கிராமத்தினர்!

 

காட்டுமன்னார்கோவில் அருகே இறந்தவர் உடலை வாய்க்காலில் ஆபத்தான முறையில் தூக்கி செல்லும் கிராமத்தினர்

பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்தும் வாய்க்காலை கடக்க உயர்மட்ட பாலம் அமைக்காத திறனற்ற ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகம்

பழைய ஒத்தையடிப்பாலம் உடைந்து கிடக்கும் கொடுமை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரசோழபுரம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சுடுகாடு வசதி என்பது அருகில் செல்லும் ஆபத்தான ராஜன் வாய்க்காலை கடந்து மறு கரையில் உள்ள கொள்ளிடம ஆற்று படுகையின் ஓரமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் வீர சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் நேற்று உயிரிழந்தார். உறவினர்கள் ஒன்று கூடி அவரை நல்லடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு உடலை எடுத்து சென்றனர். அப்போது அங்குள்ள
சுடுகாட்டுப் பாதை பாலம் இல்லாத காரணத்தினால்
அங்குள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் அதிக ஆழமும் ஆபத்தும் கொண்ட தண்ணீரில் உடலை சுமந்து சென்றனர். அப்போது நீர்மட்டம் அதிக அளவில் இருந்த நிலையில் உடலை தூக்கிச் செல்ல முடியாத நிலையில் தூக்கிச் சென்ற உடலானது தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் உடலை சுமந்து சென்றவர்கள் பத்திரமாக போராடி கெட்டியாக பிடித்துக் கொண்டு கரை சேர முயற்சி செய்தனர். ஆனாலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே வாய்க்காலில் சுமந்து சென்ற உடல் தண்ணீர் செல்லும் திசைக்கு இழுத்துச் செல்ல முற்பட்டபோது கிராம மக்கள் பாடையுடன் சேர்த்து அதை கெட்டியாக பிடித்து தூக்கிச் சென்று மறுகரைக்கு சென்றனர். இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கும் போது பல மாதங்களாக இந்த பிரச்சனை இருந்து வருவதாகவும் தங்களுக்கு இப்பகுதிக்கு இறந்தவர்களின் உடலை மறுகரையில்
உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதி ஓரமாக உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதற்கு பாலம் அமைத்து தர வேண்டும். இதனை இப்பகுதிக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கேட்டும் செல்கின்றனர். அதற்குப் பிறகு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே இங்குள்ள ஒற்றையடி பாலம் உடைந்து கிடைக்கிறது. அதனால் இனியும் அலட்சியம் காட்டாமல் திறனற்ற ஸ்டாலின் அரசு வீரசோழபுரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்க்காலை கடப்பதற்கு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.