சென்னை: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியதை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறை யாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதி மன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதி மன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக (செப்.26) காலை உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டது.
‘அமலாக்கத் துறை ஒடுக்குமுறைக்கு உச்ச நீதிமன்றமே விடியல்’ – செ.பா. ஜாமீன்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.






