ரூ.12 கோடி கஞ்சாவுடன் சிக்கிய ‘மிஸ் கேரளா’: அதிர்ந்த மும்பை விமான நிலையம்! பரபர பின்னணி!

மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா (Ganja) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ ஹர்ஷா சன்னி கைது செய்யப்பட்டுள்ளப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் பாங்காங் நகரிலிருந்து மும்பைக்கு வந்த ஹர்ஷா சன்னியின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது டிராலி பைக்குள் 12 சீல் செய்யப்பட்ட பொட்டலங்களில், 11.82 கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சாதாரண கஞ்சாவைப் போலல்லாமல், ஆய்வகச் சூழலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வீரியத்துடன் வளர்க்கப்பட்ட உயர் ரக போதைப்பொருள் ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.12 கோடி.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஹர்ஷா சன்னி, தாம் சுற்றுலாவுக்காக பாங்காங் சென்றதாகவும் அங்கு அறிமுகமான ஒருவர் தனது பையை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும்படி ஏமாற்றி கொடுத்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தம்மிடம் கொடுக்கப்பட்ட பையில் போதைப்பொருள் இருப்பது தமக்கு தெரியாது என்றும் ஹர்ஷா சன்னி கூறியுள்ளார்.

இந்த கடத்தலுக்குப் பின்னால் சர்வதேச கும்பல் உள்ளதா என்பது குறித்து சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.