வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை முதல் மழை ஆரம்பம்.. 24 ஆம் தேதி வரை கொட்டப்போகுது!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் நாளை முதல் அடுத்த 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை மறுநாள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இன்றும் நாளையும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது

நேற்று முன் தினம் (17-02-2026) பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (18-02-2026) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இதனால் இன்று 19-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இடி, மின்னலுடன் மழை கொட்டும்

நாளை 20-02-2026: தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.