அடித்தட்டுக் கடைமனிதன் அதிகாரம் பெறும்வரை உன் உயிர் உலாவிக்கொண்டிருக்கும் அண்ணா : கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி!!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அண்ணா நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“வான்நீலம் உள்ளவரை

கடல் இருக்கிறது

என்று பொருள்

மாற்றங்கள் உள்ளவரை

பசி இருக்கிறது

என்று பொருள்

தமிழ்நாடு

என்ற சொல்லுக்குள்

உயிராடல் உள்ளவரை

நீ உயிரோடு

இருக்கிறாய் அண்ணா!

இருமொழிக் கொள்கையென்ற

எரிதழல் உள்ளவரை

உன் அக்கினி

அணையாது அண்ணா!

அடித்தட்டுக் கடைமனிதன்

அதிகாரம் பெறும்வரை

உன் உயிர்

உலாவிக்கொண்டிருக்கும்

அண்ணா!

பகைவர்கள்

அடிக்கடி தரும் நெருக்கடி

உன் தேவை இன்னும்

தீரவில்லை என்கிறது

தீர்க்கமாக

உன்னை அறியாமல்

உன் பெயரை மட்டுமே

அறிந்த தலைமுறை

உன் கொள்கையென்னும்

குன்றேறி நின்றால்

அடுத்த நூற்றாண்டிலும்

நீயே ஆள்வாய் அண்ணா!

யுகச் சவாரியில்

காலத்தின் கடைக்கோடிவரை

நீள்வாய் அண்ணா!

பள்ளி மாணவனாய் அழுத

கண்ணீரின் மிச்சம்

இப்போதும் கசிகிறது

கண்ணின் கடைவிழியில்

புகழ் வணக்கம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது