2ம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்; 30 பேர் காயம்

திருநெல்வேலி: அரசு பஸ் கவிழ்ந்ததில், 30 பயணியர் காயமடைந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இருந்து நாகர்கோவில் நோக்கி, நேற்று காலை அரசு பஸ் சென்றது. டிரைவராக பிராங்கிளின் பெஞ்சமின், கண்டக்டராக குமரேசன் பணியாற்றினர்; 60 பயணியர் இருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் முருகானந்தபுரம் அருகே பஸ் சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கியபோது, சாலையோரம் கவிழ்ந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி, 30 பயணியர் காயமடைந்தனர்.

அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதே பஸ், ஏற்கனவே ஜூலை மாதம் இதே பகுதியில் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.