துாத்துக்குடி:உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி யூனியன் மறவன்மடம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
அப்போது, வருமான வரி நகர் பகுதியை சேர்ந்த மக்கள், திடீரென கருப்பு கொடி ஏந்தியபடி முகாம் நடந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கை குறித்து முகாமில் மனு அளித்து செல்லும்படி கூறினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வருமான வரி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த வசதிகள் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மழை, வெள்ள பாதிப்பின் போது, மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து விடுகிறது.எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தராவிட்டால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்.இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.






