சென்னை, ஜூலை. 05–
தி.மு.க. அரசை அகற்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி அ.தி.மு.க. கூட்டணியில் சேர விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக அழைப்பு விடுத்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 7–ஆம் தேதிமுதல் 7 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான லட்சினை மற்றும் பிரசார பாடலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களிடம் செல். அவர்களுடன் வாழ்.அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்காக சேவை செய் என்றார் அண்ணா. அண்ணா வழியில் மக்களுக்காக உழைத்தவர்கள் நம் இரு பெரும் தெய்வங்களான முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. இப்போது தான் ந மக்களை சந்தித்து பேசுகிறார் என்று.என்னைப் பற்றிகூறுவதாக முதல்வர் ஸ்டாலின் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் .
நான் எப்போதும் இயல்பாக மக்களோடு இருப்பவன். மக்களை சந்தித்துக்கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தான் நானும் அதிமுகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறோம். மிக முக்கியமான அத்தியாயம் தான் இந்த எழுச்சி பயணம். தேர்தல் பிரசாரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். இது தேர்தல் பிரச்சாரம் தான். ஆனால் இந்த பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் தேவை இருக்கிறது. எனது இந்த பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியின் குறைகளை மக்களிடம் கூறுவது. இந்த ஆட்சியில் சிறுமி முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் ,கொலை, கொள்ளை வழிப்பறி திருட்டு என்று பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. அதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். 30 ஆண்டு களுக்கு மேல் தமிழகத்தில் ஆட்சி புரிந்த இயக்கம். அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழகம் உயர்த்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அளவில் திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை கொடுத்த இயக்கம். இந்த 50 மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் அத்தனையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இந்த ஆட்சியை அகற்றுவது தான் எங்களது நோக்கம்.இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் மிகப் பெரியமாற்றம் ஏற்படும். மக்களுடைய ஆதரவை அதிமுக பெரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக வரலாற்றை படைக்கும். 2021 பொதுத்தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத 525 அறிவிப்புகளை திமுக வெளியிட்டு இருக்கிறது.மக்களை ஏமாற்றி மடை மாற்றம் செய்து ஆட்சியை பிடித்தது திமுக. பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சி பிடித்ததை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கின்ற போது அங்கு நிலவுகின்ற பிரச்சினையை முன்னிறுத்தி நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வோம். விஜய் தனித்துப் போட்டியிடுவேன் என்று அறிவித்தது அவரது முடிவு. பாஜகவும் அதிமுகவும் ஆதாயத்திற்காக கூட்டணி வைத்துள்ளதாக விஜய் விமர்சித்துள்ளார் என்கிறீர்கள். எல்லாக் கட்சிகளும் தங்களை வளர்ப்பதற்காக விமர்சனம் செய்வது இயல்பு. விஜய், திமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை. என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று நேரடியாக சொல்லவில்லை என்கிறீர்கள். நீங்கள் இந்த கேள்வியை அவரிடம் தான்கேட்க வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் அதில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அவ்வாறு நோக்கம் உள்ளவர்களுடன் நாங்கள் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அச்சுறுத்தல்கள் வந்ததன் அடிப்படையில் தான் எனது பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். அதிமுக ஆட்சி அமைக்கும் .முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லியிருக்கிறார். திருப்புவனத்திற்கு சென்று மகனை இழந்து பாதிக்கப்பட்ட தாய்க்கு ஆறுதல் சொல்வோம்.அந்த உயர் அதிகாரி யார் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்.சிபிஐ விசாரணை மேற் கொள்ளும் போது அதற் கெல்லாம் விடை கிடைக்கும். சட்டம் ஒழுங்குசீரழிந்துவிட்டது என்பதற்கு பத்திரிகைகளிலும் ஊடங்களிலும் வருகிற செய்தியே சான்று. உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையிலே நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். எங்களது கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் நிச்சயமாக வரும். வளமான கூட்டணி அமைக்கப்படும்.நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வென்று மகத்தான ஆட்சியை அமைப்போம். திமுக பரிதாபமான நிலைக்குப் போய்விட்டது. வீடு வீடாக சென்று கதவைத் தட்டி உறுப்பினரை சேர்க்கும் அளவிற்கு சென்றுவிட்டது. எல்லா கட்சியிலும் விருப்பப்பட்ட தான் மக்கள் சேர்வார்கள். அதிமுக வெற்றி ஆட்சி அமைத்த பிறகு தற்போதைய ஸ்டாலின் எங்களது வீட்டிற்கு வந்தால் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார். த.வெ.க.செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சித்தலைவர் விஜய், கொள்கை எதிரி பா.ஜ.க. வுடன் ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்டனர்.அதற்கு பதில் அளித்த அவர் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.அவ்வாறு நோக்கம் உள்ளவர் களுடன் நாங்கள் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு அவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் அ.தி.மு.க.கூட்டணியில் சேர விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக அழைப்பு விடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த அழைப்பை விஜய் ஏற்பாரா என்று தெரிய வில்லை.






