எனது மனைவிக்கு நான்தான் பிரசவம் பார்ப்பேன். வீட்டை மூடிக் கொண்டு வங்கி மேலாளரின் அட்ரா சிட்டியால் மருத்துவர்கள் திணறல்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் கோபால்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் (யூனியன் வங்கி) மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி எல்லைநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது சத்யா (26) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சத்யா இதுவரை எந்த ஒரு மருத்துவமனையிலும் கர்ப்பம் தொடர்பான சிகிச்சை பெறவில்லை என கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரும் தங்களுக்குள்ளாகவே சொந்தமாக சிகிச்சை அளித்துக் கொண்டதாகவும் இது குறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து கணவன், மனைவி இருவரையும் சந்தித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் வீட்டிலேயே சொந்தமாக பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறினார்.
இந்நிலையில் இன்று சத்யாவிற்கு பிரசவ வலி வந்ததாக தகவல் கிடைத்தவுடன் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் வீட்டின் முன் குவிந்தனர். கஜேந்திரன் சத்யா தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர வற்புறுத்தினர். ஆனால் கணவர் கஜேந்திரன் மனைவி சத்யாவை வீட்டு அறைக்குள் வைத்து மூடிக்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை வெளியே கொண்டு வர முயற்சித்தனர்.மேலும் நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் கஜேந்திரன் எந்தவித சமரசத்தையும் ஏற்கவில்லை. கஜேந்திரன் தனது செல்போனில் வீடியோகால் மூலமாக யாரிடமோ பேசி அவர்கள் கொடுக்கும் கட்டளைப்படி சொந்தமாக பிரசவம் பார்த்துள்ளார் .
இந்நிலையில், குழந்தை பிறந்த அழுகுரல் வீட்டிற்குள் இருந்து கேட்டது. அதனை கேட்டு மருத்துவ அலுவலர்கள் பதட்டம் அடைந்தனர். அதன்பின் 7 மணிக்கு ஒரு வழியாக வீட்டின் கதவை கணவன், மனைவி திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழகான 3 கிலோ எடையுள்ள பெண்குழந்தை பிறந்திருந்தது. இதனைக் கண்ட அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சத்யாவின் வீடு அருகே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். எனினும் இது போன்று மருத்துவம் அறியாத நபர்கள் பிரசவ விஷயத்தில் இது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபட்டது சுகாதாரத் துறையின்ரையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வங்கி மேலாளரின் அட்ரா சிட்டியால் அப்பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.






