முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்: ஒரு மாதத்தில் 2 முன்னாள் எம்பிக்கள் வெளியேறியதால் பரபரப்பு!

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒரு மாதத்திற்குள் அதிமுகவில் இருந்து 2 முன்னாள் எம்பிக்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவரான மைத்ரேயன், கடந்த 1991ம் ஆண்டு பாஜவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து 1999ம் ஆண்டு பாஜவிலிருந்து விலகிய மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தார். மைத்ரேயன், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக பிளவுபட்டபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். ஓபிஎஸ் அணியில் இருந்து, இபிஎஸ் அணியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பாஜவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். நேற்று காலை வரை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சூழலில், நேற்று காலை 10.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

முன்னதாக பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜூலை 21ம் தேதி திமுகவில் இணைந்தார். அதேபோல அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான், அண்மையில் திமுகவில் இணைந்தார். இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்றொரு முன்னாள் எம்பியும் திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு பின்னடைவாக உள்ளது.