கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் மதுக்கடைகளை கருணாநிதி 1971ல் திறந்து 1974ல் மூடிவிட்டார். அதன்பிறகு மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? என்பது பற்றி யாரும் பேசவில்லை என்று உளுந்தூர் பேட்டையில் நடந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பரப்பாக பேசினார்.

1971ல் கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார் என்பது உண்மை தான். அதற்கு அவர் என்ன விளக்கம் சொன்னார் என்றால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு இழப்பீடு நிதியை வழங்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசிடம் கேட்டார். ஆனால் நிதி தரவில்லை. நிர்வாகம் நடத்த முடியவில்லை. பட்ஜெட்டுக்கான போதிய வரவு செலவு இல்லை. நெருப்பு வட்டத்துக்கு நடுவே கற்புரம் சிக்கிக்கொண்டது போல் என்று விளக்கம் கூறினார். நெருப்பு வளையத்துக்கு நடுவே கற்பூர கட்டி சிக்கி தானாகவே எரியும் என்பதை தான் அவர் விளக்கமாக கூறினார். அதை நான் சரியென்று நியாயப்படுத்த வில்லை.
ஆனால் அன்றைய பொருளாதார சூழல் அடிப்படையில் கருணாநிதி அதை கூறினார். அதன்பிறகு 1974ல் மதுக்கடைகளை மூடினார். அப்போது அவர் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை என்று கூறினார். அதை தான் நாம் இன்று வைக்கிறோம். அதன்பிறகு தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? இன்று ஆட்சி செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் வந்த பிறகா இந்த மதுக்கடைகளை திறந்தார்? என்ற கேள்வியும் எழுகிறது.
ஸ்டாலினை நான் தனியே சந்தித்தபோது என்னிடம் ஸ்டாலின் ஒன்றை சொன்னார். மூடக்கூடாது என்று நினைக்கிறேனா? மூட வேண்டும் என்று தான் நினைக்கிறேன். பதறிப்போய் சொன்னார். இப்படியெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்களே? உங்களின் கட்சியை சார்ந்தவர்கள் சொல்கிறார்களே? மூட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றன. நான் அதனை மனதில் வைத்து கொள்கிறேன் என்று கூறினார்.






