அப்பல்லோவில் அட்மிட் ஆன ரஜினிகாந்த்; திடீரென பிளானை மாற்றுகிறதா வேட்டையன் படக்குழு?

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேட்டையன் படக்குழுவின் பிளான் மாற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், ரஜினிக்கு 70 வயதுக்கு மேலாகிவிட்டதால் ஆஞ்சியோவை விட அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதில் மழையில் நனைந்தபடி ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்கு உடல் நலக்குறைப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள இதயவியல் நிபுணர்கள் பரிசோதித்த பின்னரே ரஜினிகாந்துக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படும் என்பது தெரியவரும்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ரஜினி விரைவில் உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா என்கிற குழப்பமும் நிலவி வருகிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதனிடையே தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் வேட்டையன் பட டிரைலர் ரிலீசும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.