டிவி விவாதத்தில் செருப்பு வீச்சு.. அடிக்க பாய்ந்த அர்ஜுன் சம்பத்.. மதிவதனி கொடுத்த ரிப்ளைய பாருங்க!

சென்னை: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் மதிவதனி.

தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், விசிக சார்பில் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் மதிவதனி, பாஜக சார்பில் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், பல்வேறு அரசியல் இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் பார்வையாளர்களாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேசும்போது, ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பாய்ந்து வந்தார். பேசிக்கொண்டிருந்த மதிவதனிக்கு முன்பாக வேகமாக எழுந்து சென்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.

கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள், செருப்பை எடுத்து வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெறியாளர் மற்றும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மேடைக்கு வந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் மதிவதனி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் செய்த ரவுடித்தனத்திற்கும், அவர்களின் ஏவல் ஆட்களின் வெற்றுக் கூச்சலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், எப்போதும் நீ எங்கள் பிள்ளை என்ற உணர்வுடன் நேரிலும், தொலைபேசி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று அனைத்து தளத்திலும் உடன் நின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

அர்ஜூன் சம்பத்தின் செயல் எனக்கு எந்தவித தடுமாற்றத்தையும் கொடுக்கவில்லை. அசிங்கத்தில் துர்நாற்றம் தான் வரும்; அதில் நறுமணத்தையா எதிர்பார்க்க முடியும்? என்ற வகையில் நான் கடந்து சென்றுவிட்டேன். ஆனால் சம்பவத்தை வீடியோவை மூலம் பார்த்த நம் தோழர்கள் அத்தனை ஆதரவு குரலை தந்துள்ளனர். தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. பேரன்புகள்!

அண்ணன் செந்தில்வேல் தான் முதலில் அழைத்து இது என்ன பாப்பா? இப்படியா நடந்துக்கிட்டார் என்று ஆத்திரப்பட்டார். அவரிடம் சொன்ன அதே பதிலைத் தான் அதற்கு அடுத்து அழைத்த அனைவருக்கும் சொன்னேன். அவரிடம் அதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். மேலும் அவர் நினைத்தது ஒன்று; ! நடந்தது வேறு ஒன்று.

பக்கம் வந்தால் தடுமாறுவேன்; தடுமாற வேண்டும் என்று நினைத்துதான், பாய்ந்து வந்தார். கீழ் இருந்து அவர்களின் சங்கி ஆயுதமான ‘செருப்பு’ வேறு. அவர் வேறு காலில் இருக்கும் செருப்பை கழட்டி மாட்டுகிறார். உண்மையாகவே இது எதுவுமே என்னை சலனப்படுத்தவில்லை. 0.1% கூட பயத்தை தரவில்லை. அய்யாவின் கொள்கை பயணத்தில் அவர் சந்தித்த எதிர்ப்புகளை வாசித்து, வாசித்து பக்குவப்பட்டு இருப்பது அதற்கு முக்கிய காரணம்.