திடீரென மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் என்ட்ரி கொடுத்த அமைச்சர் உதயநிதி.. கழிப்பறையில் ஆய்வு!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடம் மற்றும் அங்குள்ள கழிவறை ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்.

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்துள்ளார். இன்று மதுரை யா. ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை மக்கள் தேடிச் செல்லும் காலம் போய், மக்களை தேடிச் திட்டங்கள் செல்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும், மாட்டுத்தாவணியில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் கலந்துரையாடி, பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளைக் கேட்டு, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில குறைகள் இருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று அங்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளோம். இன்று மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்போம். எந்த மாவட்டத்திற்கு போனாலும் ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இங்கும் ஆய்வு நடத்தினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “தென் தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம் – காத்திருப்பு அறை – கழிவறை – பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல் மையம் – காவல் உதவி மையம் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம்.

பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் கலந்துரையாடி, பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தோம். இந்த ஆய்வின் அடிப்படையிலும், பொதுமக்களின் கருத்துக்களை முன் வைத்தும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் – அலுவலர்களை அறிவுறுத்தினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு முக்கிய பங்காற்றி வரும் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிகிச்சைக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிகிச்சையின் தரம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார்.