பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

தமிழகத்தில் இன்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடமும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

வருகிற 13-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.