சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிகளுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் விஜய்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளனர். எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள். தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இவர்கள் செயல்படுவார்கள். குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதவ் அர்ஜூனாவும், சேலம் மாவட்டத்துக்கு அருண்ராஜ் உள்ளிட்டோரும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஜேசிடி பிரபாகர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சத்தியபாமா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளராக சிடிஆர் நிர்மல்குமார், புதுச்சேரிக்கு சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.






