கோவை: கங்கை விநாயகா மகளிர் சுய உதவி குழு என்பது, கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மூலிகை உணவகத்தில் இயற்கை உணவுகளை தயாரித்து விற்கும் பெண்கள் அமைப்பு.
அதிகாரிகள் சாப்பிட்ட உணவுக்கு காசு வாங்காமல் விடமாட்டோம் ! ஒன்றரை ஆண்டாக போராடும் மகளிர் சுய உதவி குழு கங்கை விநாயகா மகளிர் சுய உதவி குழு என்பது , கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மூலிகை உணவகத்தில் இயற்கை உணவுகளை தயாரித்து விற்கும் பெண்கள் அமைப்பு.
மாநகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுப்பார்கள் . அதற்கான தொகையை அந்தந்த துறை அதிகாரிகள் வழங்குவது வழக்கம் . இரண்டாயிரத்து இருபத்து நான்கு செப்டம்பரில் மகளிர் திட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது . அதிகாரிகள் பங்கேற்றனர் . அவர்களுக்கு உயர் தரமான மூலிகை உணவு தயாரித்து வழங்கினர் கங்கை விநாயகா மகளிர் குழுவினர்
அதிகாரிகள் ருசித்து சாப்பிட்டனர் . ‘ மூலிகை உணவு இவ்வளவு ருசியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று பாராட்டினர் . மகளிர் குழுவுக்கு ஒரே சந்தோஷம் . ஆனால் , அது நீடிக்கவில்லை . உணவுக்கான பில் தொகை ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது . கொடுத்து பதினாறு மாதங்கள் ஓடிவிட்டன . இன்றுவரை பணம் வரவில்லை. ஏதாவது சாக்கு சொல்லி , இழுத்தடிக்கின்றனர் மகளிர் திட்ட அதிகாரிகள்
இதற்கு மேலும் அதிகாரிகளிடம் கேட்டு பார்த்து பலன் இல்லை என்பதை லேட்டாக உணர்ந்து கொண்ட மகளிர் சுய உதவி குழுவினர் , நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்து, அதிகாரிகளின் தலைவரான கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்
படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் பவன்குமார் , இனியும் தாமதிக்காமல் பில் தொகையை வழங்கும்படி மகளிர் திட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் . அப்படியே செய்கிறோம் என அதிகாரிகள் பணிவுடன் தெரிவித்தனர் . என்றாலும் , இது குறை தீர்ப்பு கூட்டத்தில் வழக்கமாக காணக்கூடிய ஒரு காட்சி தான் என்பதால் , மகளிர் குழுவில் சிலருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை
குறிப்பிட்ட தேதி சொல்லி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து இருக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்
‘ ஊருக்கே நீதி சொல்லும் கலெக்டர் அலுவலகத்தில் எங்களுக்கு ஓராண்டு போராடியும் நீதி கிடைக்கவில்லை . நாங்கள் யாரும் பணக்கார தொழிலதிபர்கள் கிடையாது . சின்னஞ்சிறு முதலீட்டில் உழைத்து சம்பாதித்து பிழைக்கிறோம் . இந்த லட்சணத்தில் ஒன்றே கால் லட்ச ரூபாய் ஒரு இடத்தில் இப்படி லாக் ஆகிவிட்டால் , நாங்கள் எப்படி அன்றாடம் உணவு தயாரித்து விற்க முடியும் ? அதிகாரிகள் எங்கள் நிலைமையை கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும்’ என குமுறினார் குழு உறுப்பினர் சுதா
‘ ஒன்றரை லட்சம் தானே . . ? அரசாங்க பணம் எப்படியும் வராமல் போகாது ; ஏன் போராடுகிறீர்கள் என்று ஒரு அதிகாரி கேட்டார். அவருக்கு இது அற்ப காசு . எங்களுக்கு பெரிய தொகை வாங்காமல் விடமாட்டோம் ” என்று கொதித்தார் மற்றொரு பெண்.
மகளிர் திட்ட அலுவலர் மதுராவிடம் நமது நிருபர் கேட்டபோது , ” இது குறித்து விசாரித்து விளக்கம் அளிக்கிறேன்’ என்றார்
மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சத்யவதி மனம் திறந்து உண்மையை சொன்னார்
‘ எங்களுக்கு வந்த நிதி , பதினைந்து நாட்களில் திரும்ப தலைமை அலுவலகத்துக்கே சென்று விட்டது. நிலுவை தொகை தொடர்பாக சென்னை தலைமை அலுவலகத்தில் பேசினோம் . தற்போது நிதி இல்லை ; எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் ; நாங்கள் என்ன சார் செய்ய முடியும் ? அரசிடம் இருந்து நிதி வந்தால் தானே கொடுக்க முடியும் ? ‘ என்றார்






