திருப்பரங்குன்றம் மதவெறி அரசியல் கும்பலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் எய்ம்ஸ் வந்துவிடுமா?; விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்; திருமாவளவன் பேச்சு

மதுரை திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் “மதவெறி அரசியலை பரப்பும் சனாதன கும்பலை கண்டிப்பதாக” விசிக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர், எம்.பி.திருமாவளவன் பேசுகையில்,
“எதை வைத்தாவது அரசியல் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேடுவதே அந்த கும்பலின் நோக்கம். இந்துக்களுக்கான உண்மையான தேவைகளுக்காக எந்த இந்து அமைப்புகளும் இதுவரை போராடியதில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக உறுதியளித்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார்கள். திமுக அரசு போராடிய பின்னரே வேலையை துவங்கினார்கள். ஆனால், இதற்காக இந்து அமைப்புகள் என்றாவது போராடியவது உண்டா? ஓய்வூதிய முறையில் பழைய முறைப்படி கொண்டு வருமாறு திமுக அரசுக்கு எதிராக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் போராடினீர்களா?

நாட்டு சொத்துக்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்வது தான் உங்கள் தேசியவாதமா? நாட்டு சொத்துக்கள் சில தனி நபர்களுக்கு உடமையாக இருக்கும்போது,
நீங்கள் விரும்புகிற இந்து தேசியத்தை கூட எப்படி உருவாக்க முடியும்? பாஜக ஆளும் மாநிலங்களில் எங்கு இந்துக்கள் கல்வியில் வளர்ந்திருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினரால் பாதிக்கப்பட போவது இந்துக்கள் தான். அவர்கள் கட்டமைக்க விரும்புவது இந்து ராஷ்டிரம் அல்ல, பார்ப்பன ராஷ்டிரம். அண்ணாமலையும், நயினாரும் இந்துக்களுக்கு தான் உண்மையில் எதிராக இருக்கிறார்கள்” என்றார்
திருமாவளவன் மேடையில் பேசுகையில் அருகே கடந்து சென்ற பேருந்தில் இருந்த ஐயப்ப பக்தர்களை நோக்கி கையசைத்து “சாமியே சரணம் ஐயப்பா” எனக்கூறினார்.
தொடர்ந்து பேசியவர்,
“குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றி விட்டார்கள்.
சுப்பிரமணியருக்கு உரிய இன்னொரு பெயர் தான் ஸ்கந்தன். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறீர்கள்?
தமிழ் கடவுள் முருகன் எப்படி சமஸ்கிருதம் பேசுகிறவர்களுக்கு கடவுளாக முடியும்? முருகன் என்ற பெயரை சொல்வதற்கே ஹெச்.ராஜாவுக்கு தகுதியில்லை. எந்த வகையில் அவருக்கு முருகன் சொந்தமாக முடியும்? தமிழ்நாட்டில் ஒருபோதும் உங்கள் ஜம்பம் பலிக்காது.

நீதிமன்றம் நிபந்தனை விதித்த போதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பது தான் அவர்களது நோக்கம்.
பூரணசந்திரன் குடும்பம் விழிப்பாக இருந்து, நீங்கள் அரசியல் செய்யுமிடமில்லை என இந்து அமைப்புகளை விரட்டினார்கள்.
திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது. உபியில் இருப்பதை போல அல்ல, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் கல்வி, சோறு எல்லோருக்கும் கிடைத்து விடுமா? எய்ம்ஸ் வந்து விடுமா? அது சர்வே கல். நாயக்கர் காலத்தில் நடப்பட்ட அளவை கல். தீபம் ஏற்றுகிற வழக்கம் உச்சி பிள்ளையார் கோவில் அருகேயுள்ள தூணில் தான் 400 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை.
சங்கிகள் நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறையில் இருக்கிறார்கள்.
முருகன் பெயரான சுவாமிநாதன் என வைத்துகொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ஒரு சங்கி இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. அது பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அண்ணாமலை, நயினார், தமிழிசை, பொன்னார் புரிந்து கொள்ள வேண்டும். பிராமண கடப்பாறையை கொண்டு திராவிடத்தை இடிப்போம் என சொன்ன பின்னர் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சீமான் தமிழ் தேசியம் பேசவில்லை பிராமண தேசியம் பேசுகிறீர்கள். இப்போது இருவரை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டு விட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். திமுக ஒரு தீய சக்தி என்பது தான் விஜயின் ஒரே நோக்கம். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காக தான் விஜய் கட்சி துவங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக கட்சி துவங்கவில்லை. திமுகவை மட்டுமல்ல பெரியார், அம்பேத்கர் பேசிய அரசியலை வீழ்த்துவதற்காக பேசுகிறீர்கள். விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது.
யாருக்காகவும் நாங்கள் முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை, யாருடைய தயவிலும் நாங்கள் வாழவில்லை. எத்தனையோ அவமானங்களை கடந்து 30 ஆண்டுகள் போராடி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். கையளவு நிலமில்லாதவனுக்கு பிறந்தவன் திருமாவளவன். இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறோம். எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை.
விஜய் நேரடியாக பைனல் விளையாடி ஆட்சிக்கு வந்து விடுவாராம். அரசியல் அறியாமை இது. அப்படியெல்லாம் யாராலும் வர முடியாது. யாரோ அவரை ஏற்றி விடுகிறார்கள். திருமாவளவனுக்கு பதவி ஆசை இருந்திருந்தால் விஜயின் பின்னால் போயிருப்போம். எங்களுக்கு சீட் முக்கியமில்லை, கொள்கை தான் முக்கியம். மேடையில் எனக்கு அளிக்கப்பட்ட வேல் சமூகநீதியின் வேல். அந்த வேலை வைத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம்.
மதச்சார்பின்மை என்பது தான் அவர்களின் தொண்டையில் குத்திய முள். அம்பேத்கரை எதிர்க்கவும், ஏற்கவும் முடியவில்லை. அம்பேத்கரை ஏற்பதாக கூறிக்கொண்டு அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் அங்கீகாரம் ரத்து, முத்தலாக் என எல்லா சட்டங்களும் முசுலீம்களுக்கு எதிரான சட்டங்கள் அல்ல, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டில் 175 மசூதிகளை, தர்காக்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இடிக்கப்பட வேண்டிய மசூதிகள், தர்காக்களை கணக்கெடுத்து வைத்துள்ளார்கள்.
அந்த திட்டத்தில் ஒன்று தான் திருப்பரங்குன்றம்.

கூட்டணிக்கான எல்லா கதவுகளையும் மூடிவிட்டு நிற்க நான் என்ன முட்டாளா? எந்த அரசியல்வாதியும் அதை செய்ய மாட்டார்கள். ஆனால், நான் மூடிவிட்டு நிற்கிறேன். சனாதனத்தை எதிர்க்க வேண்டும், சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே திமுகவுடன் நிற்கிறோம். பாமகவில் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்க மாட்டோம். சாதியவாத, சனாதன அமைப்புகளுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தேர்தல் வரும் போகும். இந்த மண்ணின் மக்களை காப்பாற்ற வேண்டும்.

இன்று திருப்பரங்குன்றத்தை குறி வைத்திருப்பவர்கள், நாளை எந்த இசுலாமிய வழிபாட்டு தலங்களை குறி வைப்பார்கள் என தெரியாது.
இது முன்கூட்டியே கோல்வால்கர் காலத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று. 2010 வரை தமிழகத்தில் ஒன்றாக இருந்த தலித் அமைப்புகள் எல்லாம் இப்போது நிரந்தரமாக உடைக்கப்பட்டு விட்டது. நாடு முழுவதும் இப்படி சாதியின் பெயரால் தலித் அமைப்புகள் உடைக்கப்பட்டு விட்டார்கள். நாடு முழுக்க ஓபிசி சமூகம் ஒன்றுமையாக இல்லை. இது ஆர்.எஸ்.எஸ். சாதியால் நிகழ்ந்தது.
சாதிய உணர்வை ஊட்டி, இந்து பெரும்பான்மையை உருவாக்குகிறார்கள்.
தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு இன்று பிராமண கடப்பாறையை சீமானுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
சமூக நல்லிணக்கத்தை காப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு என கொலிஜியம் முறை இருக்கிறது. அதில் சட்ட திருத்தம் செய்து தலைமை நீதிபதியை நீக்கி விட்டார்கள். நீதிபதி சுவாமிநாதன் பரிச்சை எழுதி தேர்ச்சி பெற்று வந்தவர் அல்ல. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றமே கட்டப்பஞ்சாயத்து செய்தது.
திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் யாரும் தீபம் ஏற்ற சொல்லவில்லை.
நீதிபதி அடாவடித் தனமாக தந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருந்த திமுக அரசாங்கத்தை, காவல்துறை பாராட்டுகிறோம்.
சில அதிகாரிகள் துணை போயிருந்தாலும் கூட, தீர்ப்பை அமல்படுத்த முடியாது என திமுக அரசு உறுதியாக இருந்தது. திருப்பரங்குன்றம் பிரச்சனையை விடவே மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னரும் தொடர்வார்கள். மதுரையை வன்முறைக்காடாக ஆக்க முயல்கிறார்கள். அதற்கு மக்கள் இடம் கொடுக்கவே கூடாது.

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என பேசிய ஹெச்.ராஜாவை ஏன் இன்னும் அரசு கைது செய்யவில்லை? திருமாவளவன் இப்படி பேசினால் சும்மா விடுவார்களா? பெரும்பான்மை இந்துக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை தான் ஆதரிக்கிறார்கள். ஹெச்.ராஜா மீது வழக்கு போட்டால் இந்துக்கள் திமுக அரசுக்கு எதிராக திரும்புவார்கள் என யாராவது சொன்னால் அதை முதல்வர் நம்ப வேண்டாம். சங் பரிவார் அமைப்புகளே உங்கள் அரசியலை தென் இந்தியாவில் செய்யாதீர்கள். தமிழ்நாடு மாறுபட்ட மண்” என்றார்.