பயணியரை தாக்கிய பீஹார் வாலிபர் முதியவர் சாவு; 2 பேர் படுகாயம் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு!

திருநெல்வேலி:திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலுக்காக காத்திருந்த பயணியரை பீஹார் மாநில வாலிபர் கட்டை யால் சரமாரியாக தாக்கினார்.

இதில், 70 வயது முதியவர் பரிதாபமாக பலியானார். காயமுற்ற மேலும் 2 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பீஹார் வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு, ரயில்களுக்காக பயணியர் பிளாட்பாரங்களில் காத்திருந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியைச் சேர்ந்த பாண்டி துரை, 29, என்பவர் 4வது பிளாட்பாரத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.

இரவு, 9:15 மணிக்கு அங்கு வந்த வட மாநில வாலிபர் திடீரென கட்டையால் பாண்டிதுரையைத் தாக்கினார்.

தொடர்ந்து அங்கு நின்ற கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கப்பன், 72, கேரளா மாநிலம் புனலுாரைச் சேர்ந்த பிரசாத், 49, ஆகியோரையும் அடுத்தடுத்து சரமாரியாக தாக்கினார்.

இதை கண்ட மற்ற பயணியர் அங்கிருந்து அலறியடித்து தப்பியோடினர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி விட்டார். காயமடைந்த மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இதில் தங்கப்பன் இறந்தார்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு, அப்பாவி பயணியரை தாக்கிய பீஹார் மாநிலம் கயாவை சேர்ந்த சூரஜ், 26, என்பவரை கைது செய்தனர்.

பீஹாரில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டவர் அப் பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிகிறது.

தங்கப்பனிடமிருந்து மொபைல் போனை பறித்து, சூரஜ் ஓடியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, கொடூர ஆயுதம் பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.