Olympics 2024: பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அசால்டாக நின்று வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி வீரர்!

ஸ்பெஷலான உபகரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக வந்து நின்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற துருக்கி துப்பாக்கி சுடுதல் வீரரின் செயல் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், சுவாரஸ்யங்களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (ஜூலை 31ம் தேதி) துருக்கியைச் சேர்ந்த யூசஃப் டிகெக் (Yusuf Dikec) என்பவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எந்தவொரு ஸ்பெஷலான உபகரணங்களும் இல்லாமல், சாதாரணமான கண் கண்ணாடியை மட்டும் அணிந்தபடி இயல்பாக பாக்கெட்டிற்குள் கைவிட்டபடி துப்பாக்கி சுடுதல் நடத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் சத்தம் கேட்காமல் இருக்க நாய்ஸ் கேன்சலர் ஹெட்செட், தெளிவான பார்வைக்கு லென்ஸ் மற்றும் சரியாகக் குறி வைக்கத் தனியே ஒரு லென்ஸ் என ஸ்பெஷலான உபகரணங்களுடன் களத்தில் வந்து நின்று சுடுவார்கள். ஆனால் யூசஃப் டிகெக், இவை ஏதுமின்றி சாதாரணமாக வந்து நின்று குறி வைத்துச் சுட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை ட்ரெண்ட் செய்து யூசஃப் டிகெக்கை வியந்து பாராட்டி வருகின்றனர்.
யூசஃப் டிகெக்கு 51 வயது என்பதும் கூடுதல் ஆச்சர்யம் தரும் தகவல். துருக்கியைச் சேர்ந்த பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் 2008ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நடக்கும் பல துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் தவறாமல் பங்கேற்று வருபவர். இது அவர் பங்கேற்கும் ஐந்தாவது ஒலிம்பிக்ஸ். இந்த ஒலிம்பிக்ஸில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இயற்பியலில் பட்டப்படிப்பு படித்திருக்கும் இவர், துப்பாக்கி சுடுதலில் மிகவும் கைதேர்ந்தவர். 2014ம் ஆண்டு உலக சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பிரிவுகளில் வென்றார். ஐரோப்பிய சேம்பியன்ஷிப்பில் பங்கேற்று 7 பிரிவுகளில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டைட்டில் வென்றவர்.

துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றிருந்தனர். இதன் மூலம் மனுபாக்கர் ஒரே ஒலிம்பிக்கில்  2 பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். இதைத் தொடர்ந்து 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 451.4 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆனது. பதக்கப்பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *