நெல்லை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள் இறக்கியதாகவும் போலீசாரை தாக்கியதாகவும் கூறி இளைஞர் மணிகண்டன் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எஸ்.ஐ இசக்கிராஜாவை கைது செய்யக் கோரி ஆலங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இசக்கிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் மணிகண்டன் (வயது 32). அப்பகுதியில் பனையேறும் தொழில், விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை நடப்பதாக வந்த புகாரின் பேரில் மணிகண்டன் தோட்டத்தில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மற்றும் 2 போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் வீட்டில் இருந்த மணிகண்டன், அவரது தந்தை பெருமாள் சேட் ஆகியோரை அழைத்து கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர். மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கிருந்த மணிகண்டனின் சகோதரர் சிவ பொன்ராஜ், அவரது மகள் பிரதீபா (17) ஆகியோரை போலீசார் தரக்குறைவாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு நின்ற சிறுமி பிரதீபாவையும் போலீசார் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட மணிகண்டன், இசக்கிராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இசக்கிராஜா காயம் அடைந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி 4 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் அவரது கால்களில் பட்டு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து இசக்கி ராஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆலங்குளம்- முக்கூடல் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு குவிந்து எஸ் ஐ இசக்கிராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.
அதிமுக, நாம் தமிழர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தமே இல்லாமல் சாதாரண விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய எஸ் ஐ மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மணிகண்டன் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், 3 போலீசார் ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி, பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மரணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையான காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எஸ் ஐ இசக்கிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இசக்கிராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீராவி முருகன் என்பவரை என்கவுண்டர் செய்தவர் ஆவர். கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வடக்கு மண்டலத்துக்கு சமீபத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து கோவில்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






