பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரத்தில் மகளிர் காங்கிரசார் பேரணி. தமிழகம் முழுவதும் பேரணி முடிவடைந்து ஜனாதிபதியிடம் மனு அளிக்க இருப்பதாக மாநில தலைவி பேட்டி
மத நல்லிணக்க ஒற்றுமைக்காகவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஊர்களில் பேரணி நடந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தில் இன்று பேரணி நடந்தது.
சிதம்பரத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் ராஜீவ்காந்தி சிலைகளுக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசினா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு மகளிர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர்.
எஸ்.பி. கோயில் தெரு, மாலைக்கட்டி தெரு, உமையாள் சந்து வழியாக சென்ற பேரணி காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது. பின்னர் அங்கு பேரணியை விளக்கி நிர்வாகிகள் பேசினர். இதில் ஏராளமான மகளிர் காங்கிரசார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசினா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று சிதம்பரத்தில் பேரணி நடந்தது. பெண்கள் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும். உலக அரங்கில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்டதுதான் பஞ்சாயத்துராஜ். அதில் ஏற்கனவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது.
இந்த நிலையில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பாஜக கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். ஆனால் அதை அமல்படுத்தவில்லை. நாங்கள் எங்களின் இட ஒதுக்கீட்டிற்காக மோடியிடம் பிச்சை எடுக்க வேண்டுமா?
எப்போது அரசியல் சாசனத்தை எடுத்துக்கொண்டு ராகுல்காந்தி சாலையில் நடக்க ஆரம்பித்தாரோ அப்போதே மோடி பயந்து விட்டார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் சாசனத்தை எடுத்து வணங்குகிறார் மோடி. அவர் வணங்கிணாரா? அல்லது தலையில் அடித்துக் கொண்டாரா என்பது தெரியவில்லை. மோடி அரசின் பாசிச அராஜக ஆட்சியை தோற்கடித்து இருக்கிறது இந்த அரசியல் சாசனம்.
அம்பேத்கர் நாட்டிற்கு அளித்த ஒரு அரசியல் சாசனம், ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தத்தில் இயங்கும் ஒரு அரசியல் சாசனம் என இரண்டு அரசியல் சாசனம் இருக்கிறது. தாயின் கருவறையில் நான் பிறக்கவில்லை. நான் கடவுள் என்று மோடி கூறுகிறார். 2014 இல் நான் சேவகன் என்றார். 2019ல் நான் காவலன் என்றார். இப்போது 2024ல் நான் கடவுள் என்கிறார். 2029ல் அவர் சர்வாதிகாரி என்பார்.
இப்படிப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சி தேவையா? இந்த சர்வாதிகாரத்தை அகற்ற பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி பல மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக பேரணி சென்று வருகிறோம். இன்று கடலூர் மாவட்டத்திலும் பேரணி நடந்தது. அனைத்து மாவட்டங்களும் பேரணி முடிந்த பிறகு இந்திய ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து 33 சத இட ஒதுக்கீட்டை பெறுவோம் என்றார்.






