மட்டன் குழம்பு சிக்கன் வறுவல்; கறி விருந்துடன் கூட்டம் அதிமுகவில் புது டெக்னிக்: முண்டியடித்த கூட்டம்

விழுப்புரம்: தேர்தல் என்றாலே குவார்ட்டரும், கோழி பிரியாணி கொடுப்பதும் அரசியல் கட்சிகளில் சகஜம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவியை கையில் வைத்திருக்கும் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் நெருங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் தொகுதி வாரியாக சென்று கட்சிபணிகளை முடுக்கி விட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்விக்குப்பின் ராஜ்யசபா எம்பியான பின்னர் அவர் மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் சட்டமன்ற தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சோர்ந்து போய் இருக்கும் அதிமுகவினரை உற்சாகப்படுத்த நேற்று கறிவிருந்து வைத்து தடபுடலாக கவனிப்பு நடந்தது. இதற்காக இரண்டு பெரிய திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு ஒன்றில் கறிவிருந்துக்கும், மற்றொன்றில் கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடத்தப்பட்டது. காலை 11 மணி முதலே கறிவிருந்து போடத் தொடங்கினர். இதனால் கூட்டம் நடந்த மண்டபத்தில் இருந்த தொண்டர்களை விட, கறி விருந்து நடந்த மண்டபத்தில் கூடுதல் தொண்டர்கள் முண்டியடித்து சென்றனர். வாழை இலை போட்டு சிக்கன் வறுவல், அவித்த முட்டை, மீன்குழம்பு, மட்டன் கறிக்குழம்பும், ரசம், மோர், குளோப் ஜாம் என பலவகைகளை அடுக்கி கட்சியினரை செமையாக கவனித்தாராம்.

இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் விருந்துக்கு வந்ததால் அங்கு போதிய இட பற்றாக்குறையால் பந்தியில் இடம்பிடிக்க முட்டி, மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அங்கு நடந்த களேபரத்தால் மண்டபமே பரபரப்பாக காணப்பட்டது.

கூட்டம் நடந்த மண்டபத்தில் இருந்த தொண்டர்களை விட, கறி விருந்து நடந்த மண்டபத்தில் கூடுதல் தொண்டர்கள் முண்டியடித்து சென்றனர்.